முதல்முறையாக உள்ளாட்சித் தேர்தலில் 50% பெண்களுக்கு... திணறும் அரசியல் கட்சிகள்

பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கிய முதல் தேர்தலாக 201 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.


பெண்களுக்கு எதிலும் சமஉரிமை என்பதை பேச்சளவில் இருந்து நடைமுறை அளவுக்கு கொண்டுவருவதற்கான சிறப்பான முன்னெடுப்பை மாநில தேர்தல் ஆணையம் இந்த ஆண்டு நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் நடைமுறைப்படுத்தியுள்ளது..


2016 ஆம் ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் 3 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்து, தற்போதுதான் நடைபெற உள்ளது. எதிர்வரும் 27 ஆம் தேதி மற்றும் 30 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள ஊரகப்பகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இதுவரை தேர்தல் இட ஒதுக்கீடு என்றால் பெண்களுக்கு 33 சதவீதம் தான். இந்நிலையில், இந்த தேர்தலில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. இது வரவேற்கத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது. ஆனால், கட்சி ரீதியாக வேட்பாளர்கள் கிடைப்பதில் சிரமம் உள்ளதாக அரசியல் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த இட ஒதுக்கீட்டு முறையால், சில கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் தங்கள் சொந்த வார்டுகளில் போட்டியிட முடியாத நிலையும் உள்ளது என்றும் தெரிவிக்கின்றனர்.

கட்சியில் மாவட்டப்பொறுப்பு வகிப்பவர்களும் கூட உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய பிரதிநிதிக்காக போட்டியிடுவார்கள். அப்படியிருக்க, இந்த இட ஒதுக்கீட்டு முறையால் பல நிர்வாகிகள் போட்டியிட முடியாமல் போகிறது என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.